Wednesday 16 September 2015

துகிலாத நினைவுகள்

அழத் தோன்றவில்லை!
விழிநீர் வழிதல்
உனக்கு வலி தருமென்பதால்
இமைகள் சுமக்கின்றன
கண்ணீரின் பாரத்தை ...

எங்கிருந்தோ வந்தாய்
ஏதேதோ பேசினாய்
பேசாத மௌனத்தை
கவி வடித்தாய்
உனக்கெனப் பிறந்தவளாய் இவள்
காதலாகி கசிந்துருகினோம் .....

உன் ஆசைகளையும்
என் கனவுகளையும்
சேர்த்துக் கட்டினாய்
மூன்று முடிச்சில்...

சொர்க்கத்தைத் தோற்றுவித்த
திருமண பந்தம் தொடராமல் போனதற்கு
பிழை என்னவோ
பலியாகியது நாமன்றோ .....

சாலை விபத்தொன்றில்
சரிந்தாயாம் நீ
இறப்பின் சுவடின்றி
முதன் முதலாய் கண்ட களை
உன்னில் குறையாதது
என் கண்களுக்குத் திரையிடவோ ?

பூவும் பொட்டும்
விலக்கப்படவில்லை
என்னுடனே பிறந்ததால்...
திருமாங்கல்யம் தவறுகையில்
நெஞ்சோடு இறுக்கிக்கொண்ட
உந்தன் நினைவுகளை
எதில் சேமிப்பது......

நீயின்றி என்ன பேசிவிடும்
இந்த வெற்று வானமும்
உடைந்த நிலவும் ?
காதல் உதிர்த்த
நம் வீடு கதறியழுத பாவம்
யாரைச் சேரும் ?

இளமையும் படிப்பும்
ஏமாற்றவில்லை
மறுமணம் புரிந்தால்
புது வாழ்வுண்டு
நாதியற்றுப் போனதற்கு
நல்ல துணை வரும்

ஒப்புக்கொள்கிறேன்
திறந்த மனதோடு ..
நிச்சயமாய்.....

உன்னை விடுத்து
வேறொருவனுடன்
வாழ்வைப் பகிர
விலை பொருளாய்
விற்றுத் தீர்க்க முடியாதது
என் காதல் !!

No comments:

Post a Comment